சென்னை, மார்ச்.18-
தமிழகத்தில், கடந்த இரண்டரை மாதங்களில், 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர், ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், ஏற்படும் ரேபிஸ் தொற்றில் இருந்து, செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு தடுப்பூசி தீர்வாக இருக்கிறது.
நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில், இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இவ்வாறு தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களைக் கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், 43 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர். இவ்வாண்டு, கடந்த இரண்டரை மாதங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 764 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நால்வர் மரணமடைந்துள்ளனர்.