இஸ்கண்டார் புத்ரி, மார்ச்.18-
ஜோகூர், ஶ்ரீ ஆலாமில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் பதனிடும் ஒரு தொழிற்சாலை மற்றும் மூன்று ஆய்வுக் கூடங்களில் இருந்து 12.95 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பறிமுதல் நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை கடத்தும் அனைத்துலக கும்பல் ஒன்றை போலீசார் வெற்றிகரமான முறியடித்துள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவுடன் ஒன்றிணைந்து இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் பிரிவு இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் குறிப்பிட்டார்.
ஆறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் மிகப் பேரளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.