ஷா ஆலாம், மார்ச்.19-
நடந்து முடிந்த ஜசெக தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் லிம் குவான் எங் தவறிய போதிலும் கட்சியின் ஆன்மாவாகவும், அடையாளமாகவும் விளங்கும் அவர், கட்சியின் ஆலோசகர் பதவியின் மூலம் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வார் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
30 பேர் கொண்ட ஜசெகவின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், லிம் குவான் எங்கிற்கு ஆதரவு சரிந்து, அவர் 26 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
லிம் குவான் எங்கிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து உச்சிக் குளிரும் தரப்பினர், தவறான முடிவை எடுத்து விட்டனர் என்று ஜசெக.வின் கிளந்தான் மாநில முன்னாள் தலைவரான ஸைட் வர்ணித்தார்.
கட்சி உறுப்பினர்கள் புதிய தலைமையை விரும்புவது தவறு அல்ல. ஆனால், ஜசெக.வின் தலைவர் பதவியில் லிம் குவான் எங், இனி இல்லை என்றாகி விட்ட நிலையில் கட்சியின் செல்வாக்கு முன்பு போல் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எண்ணி விட வேண்டாம் என்று ஸைட் நினைவுறுத்தினார்.
கட்சியிலிருந்து லிம் குவான் எங்கை கிட்டத்தட்ட அகற்றிவிட்டதாக எக்களிப்பவர்கள், தங்கள் தவற்றுக்காக நிச்சயம் வருந்துவர். காரணம், லிம் குவான் எங் – தான், ஜசெக.வின் மிகப் பெரிய அடையாளம் மற்றும் ஆன்மா என்று கோத்தா பாரு முன்னாள் எம்.பி.யான ஸைட் வர்ணித்தார்.