கோலாலம்பூர், மார்ச்.20-
வரும் மார்ச் 27 ஆம் தேதி மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உடைக்கப்படாது, மாறாக அனைவருக்கு ஏதுவாக இட மாற்றம் செய்ய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்திருக்கிறார். சுமார் ஒரு மாதத்திற்கு முன் கோவில் நிர்வாகத்தினர் அப்பிரச்னை தொடர்பில் தம்மை அணுகியதாகவும் அதன் பிறகு பல முறை விவாதங்களும் சந்திப்புகளும் நடந்ததாக அவர் கூறினார்.
அவ்விவகாரத்திற்கு நியாயமாகவும், பக்தர்களைப் புண்படுத்தாத வகையிலும் அனைத்து தரப்புக்கும் இணக்கமான சுமூகத் தீர்வு காண பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனுடன் இணைந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் கோபிந்த் குறிப்பிட்டார். அக்கோயிலுக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தித் தரும் முயற்சியாக அது குறித்து பல முறை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே அவ்விஷயத்தில் நல்ல தீர்வை எட்ட அனைத்து தரப்பினரும் சுமூகமான முறையில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கோயிலை இட மாற்றம் செய்ய, மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மார்ச் 27 ஆம் தேதி அக்கோயில் உடைக்கப்படாது, கோயிலை புதிய இடத்திற்கு மாற்ற, கோவில் நிர்வாகத்திற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் என கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிப் இன்று கோயில் நிர்வாகத்திடம் நேரில் சென்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.