பெஷாவர், மார்ச்.21-
பாகிஸ்தானில், அந்நாட்டு ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ராணுவ கேப்டன் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கைபர் பக்தூன்வா மாநிலத்தில் அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள், ஆப்கன் எல்லையில் இருந்து கொண்டும், மலைப்பாங்கான பகுதிகளில் பதுங்கிக் கொண்டும் ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு தாக்குதல் நடத்திச் சென்ற ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ கேப்டன் ஹஸ்னைன் அக்தர் கொல்லப்பட்டார். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பயங்கரவாதிகளில் 10 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைபர் மாநிலத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.