ஐதராபாத், மார்ச்.24-
தெலுங்கானாவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் உச்சமாக, தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் ஹைதராபாத் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். தமது கைப்பேசி கோளாறாகி விட்டதால் அதைச் சரி செய்ய, அவர் ஐதராபாத் புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
அவர் பயணித்த பெட்டியில் இவருடன் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் இருந்துள்ளனர். 2 பேர் வழியில் இறங்கிவிட இந்த பெண் மட்டுமே தனித்து இருந்துள்ளார். அப்போது அதே ரயிலில் பயணித்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், அந்த பெண்ணை நெருங்கி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அதை தடுக்க அந்த இளம் பெண் முயற்சித்த போது அவ்விளைஞன் தாக்க முயற்சித்துள்ளான்.
ஒருகட்டத்தில் வாலிபனிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார் அப்பெண். தலை, கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் அவர் கீழே விழுந்து கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் கண்டு, மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.