கோலாலம்பூர், மார்ச்.25-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் 130 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு இடம் மாற்றுவதற்கு ஆலய நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அருகாமையிலேயே வழங்கப்பட்ட ஒரு புதிய நிலத்தில் ஆலயம் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு ஆலய நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கார்த்திக் குணசீலன் தெரிவித்தார்.
ஆலய நிர்வாகத்திற்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோவிலை புதிய இடத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கார்த்திக் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வார காலமாக நீடித்து வந்த தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்திய அமைச்சருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் ஆலயம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கார்த்திக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிலத்தில் அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அ ன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்து இருந்தார்.
எனவே அந்த கோவிலை அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட வேண்டும் என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
அதே வேளையில் அந்த நிலத்தில் மடானி பள்ளிவாசலை நிறுவுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டதைத் போல நாளை மறுநாள் மார்ச் 27 ஆம் தேதி வியாழக்கிழமை தமது தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.