கோலாலம்பூர், ஏப்ரல்.01-
கோலாலம்பூருக்கு அருகில் புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாசுக்குச் சொந்தமான நிலத்தடி எரிவாயு குழாய், இன்று காலை 8.30 மணிக்கு தீப்பற்றிக் கொண்டது.
தீயின் ஜுவாலை, கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு , வான் உயரே நோக்கி எழும்பியதில், அதன் கோரத்தை, பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மக்கள் பார்க்க முடிந்தது.
டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையான LDP அருகில் நிகழ்ந்த இத்தீவிபத்து தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தீயின், உஷ்ணத்தின் தாக்கம், அருகில் உள்ள வீடமைப்புப் பகுதிகளில் உணர முடிந்தது.
இச்சம்பவம் சுபாங் ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
காலை 8.10 மணியளவில் அப்பகுதியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் இத்தீ குறித்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
தீயை அணைக்கும் பணியில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களின் உதவியுடன் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.