எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு நிச்சயம் உதவும்

சுபாங் ஜெயா, ஏப்ரல்.04-

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு நிச்சயம் உதவும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உத்தரவாதம் அளித்துள்ளார்.

இன்று புத்ரா ஹைட்ஸில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக உதவி மையத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை இலக்கவியல் அமைச்சர் நேரடியாகச் சந்தித்தார்.

தமது அமைச்சின் கீழ் 100 திறன்பேசிகள், 100 மடிக்கணினிகள் , 100 tab, 500 மின்னூட்டி என நுட்பவியல் தொடர்புப் பொருட்கள் வழங்கப்படுவதோடு, இதர உதவிகளும் நல்கப்படும் என கோபிந்த் சிங் உறுதி கூறினார்.

தீச் சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரடியாகச் சென்று கண்ட பின், அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்க, அவர்கள் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது அமைச்சுடன், இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவுக் கழகம், சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகம், தொழில்நுட்ப இலக்கவியல் பெருளாதாரக் கூட்டுறவு கழகம் ஆகியன, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெளிவான தகவல்களையும், தேவையான தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதை உறுதிச் செய்யும் எனவும் அமைச்சர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக விளங்கிய புத்ரா ஹைட்ஸ் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்துக்கு வருகையளித்து, அந்த ஆலய நிர்வாகம் அயராது வழங்கும் உதவிகளுக்கும் சேவைகளுக்கும் நன்றி பாராட்டினார்.

WATCH OUR LATEST NEWS