தாப்பா, ஏப்ரல்.12-
பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், எதிர்பார்த்ததைப் போல மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
அம்னோ சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் முகமட் யுஸ்ரி பாகீர், பாஸ் கட்சி சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹாய்மின் மாலேக் மற்றும் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் வேட்பாளராக பவாணி கேஎஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை தாப்பா, டேவான் மெர்டேகா மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வேட்புமனுத் தாக்கலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பிஎஸ்எம் ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் அதிகாரி அஹ்மாட் ரெடாவுடின் அஹ்மாட் ஷுகோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முன்னதாக மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தத்தம் கட்சியின் வேட்பாளருடன் புடை சூழ, கட்சி கொடிகளை ஏந்திய வண்ணம், மிகுந்த ஆரவாரத்துடன் வேட்புமனுத் தாக்கல் மண்டபத்தை நோக்கி வந்தனர்.
எவ்வித சலசலப்பின்றி சுமூகமாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காவல் பணியில் ஈடுபட்டனர்.