சிரம்பான், ஏப்ரல்.12-
இந்து கோவில்களுக்குப் பொறுப்பேற்று இருப்பவர்கள் கோவிலை, கோவிலாக மதிக்கும்படி மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மலேசிய ர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் கேட்டுக் கொண்டார்.
கோவிலை, கோவிலாகப் பராமரிக்காவிட்டால் இந்து சமூகம் பல சிக்கல்களில் சின்னாபின்னமாகும் நிலை ஏற்படலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில இந்து சங்கத்தின் ஒத்துழைப்புடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் இன்று சிரம்பானில் நடைபெற்ற இந்து ஆலயங்களை வளப்படுத்தும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தங்க கணேசன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
பிற மதத்தினரின் வழிபாட்டுத்தளங்கள் நிர்வகிக்கப்படும் முறை மீதான ஒப்பீடு வேண்டாம், நாம் நமது ஆலயங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சிந்தனைதான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தளங்களுக்கு வருகை தரக்கூடியவர்கள் யார், அவர்களின் எண்ணிக்கை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் புதைக்கப்பட்ட இடம் எங்கு உள்ளது, வழிபாட்டுத்தளங்களை நிர்வகிப்பதற்கு பணம் எவ்வாறு பெற முடியும் உட்பட அனைத்து தரவுகளும் ஒரு விசையை அழுத்தினால் தெரிந்து விடும். நம்முடைய ஆலயங்களில் அத்தகைய தரவுகள் உள்ளனவா? நமது ஆலயங்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய தங்க கணேசன், தயவு செய்து ஆலயங்களுக்கு மதிப்பளியுங்கள் என்று வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில இந்து சங்க தலைவர் சிவ ஸ்ரீ அனந்த கோபி, தமது உரையில், “ஓர் ஆலயத்தின் நிர்வாகம் முறையாக செயல்பட வேண்டும். அனைத்து ஆலயங்களிலும் தகுதியான குருக்கள், தலைவர், முறையான வழிபாடுகள் நடைபெற வேண்டும். குருக்களுக்குத் தகுந்த சம்பளம்,, தங்கும் வசதி, உணவுகள் வழங்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எந்தெந்த கோவில்கள் பதிவு செய்யப்படவில்லையோ அவற்றை உடனடியாக பதிவு செய்யுமாறு ஆலயப் பொறுப்பாளர்களை சிவ ஸ்ரீ அனந்த கோபி தமது உரையில் கேட்டுக் கொண்டார்.