காங்கோவில் படகில் தீ பற்றி 50 பேர் உயிரிழந்த சோகம்

கின்சாசா, ஏப்ரல்.17-

காங்கோவில் படகில் தீ பற்றியதில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். அதே வேளை படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி 100க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. படகில் பெண் ஒருவர் சமையல் செய்த போது தீ பரவியதாக விசாரணையில் தெரிய வந்தது.

WATCH OUR LATEST NEWS