அனைவரும் கைக்கோர்த்தால் வாசிப்பை நேசிப்போம் திட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியும் – டத்தோ அன்புமணி பாலன் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்ரல்.17-

இந்திய சமுதாயத்தின் மத்தியில் குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை மீட்டெக்க அனைவரும் ஒன்றிணைந்து கைக்கோர்த்தால், அத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியும் என்று தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனனின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.

வாசிப்பை நேசிப்போம் திட்டம் ஒரு சிறந்த முயற்சியாகும். நல்ல ஒரு தொடக்கமாகும். இந்த திட்டத்தை முன்னெடுக்க ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி இந்திய சமுதாயமே ஒன்றிணைந்து கைக்கோர்த்தால் நிச்சயம் வாசிக்கும் பழக்கமுடைய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று டத்தோ அன்புமணி குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள பிரபல உணவக மண்டபத்தில் தமிழ்ப்பள்ளிகள் முன்னாள் மாணவர் சங்கங்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாசிப்பை நேசிப்போம் திட்டம் மற்றும் சிறுவர்களுக்கான நித்திரைக் கதைகள் நூல் அறிமுகம் ஆகிய நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோ அன்புமணி மேற்கண்டவாறு கூறினார்.

வாசிப்பது என்பது புத்தகம் மட்டும் அல்ல. நாம் பார்க்கக்கூடிய, கிரகிக்கக்கூடிய, கருத்துணரக்கூடிய அனைத்துமே வாசிப்பின் உள்ளடக்கமாகும். வாசிப்பின் அருமையை உணரக்கூடிய ஒரு சமூகமே சிந்தனை ரீதியாக உயர முடியும் என்று டத்தோ அன்புமணி குறிப்பிட்டார்.

அதே வேளையில் சிறார்களுக்கான* நித்திரைக் கதைகள்* எனும் 61 கதைகளை எழுதி, நூல் வடிவத்தில் கொண்டு வந்துள்ள நூலாசிரியர்களான முனைவர் கஸ்தூரி இராமலிங்கம் மற்றும் நிரோஷா கோபால் கிருஷ்ணன் ஆகியோரை டத்தோ அன்புமணி வெகுவாகப் பாராட்டினார்.

இந்த நூலை வெளிக்கொணரும் முயற்சிக்கு மேற்கண்ட இரு பெண் எழுத்தாளர்களுக்கு பெரும் துணையாக இருந்த பேரவையைச் சேர்ந்த பார்த்தீபனும் கேசவனும் டத்தோ அன்புமணிக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர்.

முன்னதாக, வரவேற்புரையாற்றிய தமிழ்ப்பள்ளிகள் முன்னாள் மாணவர் சங்கங்கள் பேரவையின் தலைவர் டத்தோ RRM கிருஷ்ணன், வாசிப்பை நேசிப்போம் என்பது புதிய திட்டம் அல்ல என்றார்.

வாசிப்பை நேசிப்போம் என்ற தாரக மந்திரத்தை அன்றைய நாளில் ஆசிரியர்கள் போதித்தார்கள். அது மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில் சிறார்கள், நவீன கைப்பேசிகளையும், இதர சாதனங்களைக் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் இக்காலக்கட்டத்தில், அவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பு, நல்ல கதைகளைப் படித்து, உறங்கச் செல்ல இந்த இரு ஆசிரியர்கள் எழுதியுள்ள நித்திரைக் கதைகள் நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமது தலைமையிலான பேரவை, அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நித்திரை கதைகள் நூலைக் கொண்டு சேர்த்து, மாணவர்கள் மத்தியில் வாசிப்பை நேசிப்போம் திட்டத்திற்கு வெற்றியைத் தேடி தரும் என்று டத்தோ RRM கிருஷ்ணன் தமது உரையில் குறிப்பிட்டார்.

நித்திரைக் கதைகள் நூலை எழுதிய சிங்கப்பூர் தேசியப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் முனைவர் கஸ்தூரி இராமலிங்கம் மற்றும் நிரோஷா ஆகியோர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு இந்த 61 கதைகளையும் எழுதுவதற்குth தாங்கள் எடுத்துக் கொண்ட காலக்கட்டம் ஓராண்டாகும் என்றார்.

முனைவர் கஸ்தூரி இராமலிங்கம் விவரிக்கையில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பின்புலம் மற்றும் அறிவாற்றலுக்கு உகந்த நிலையில் 10 மையக் கருத்துகளைக் கொண்டு இந்த 61 புனைக் கதைகளையும் மாசாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியரான நிரோஷாவுடன் இணைந்து எழுதியதாகக் குறிப்பிட்டார்.

சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி உட்பட பொது இயக்கப் பொறுப்பாளர்கள் திரளாக மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மலேசியாவில் நேதாஜி மையத்தின் பொறுப்பாளர் தலைவர் சுப. நாராயணசாமி , டத்தோ பா. சகாதேவன் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். கவிமாறன் நிகழ்வுக்கு நெறியாளராகச் செயல்பட்டார்.

WATCH OUR LATEST NEWS