தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கூடுதல் லாப ஈவு – டத்தோ சகாதேவன் அறிவிப்பு

ஈப்போ, ஏப்ரல்.21-

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் அதன் உறுப்பினர்களுக்குக் கடந்த ஆண்டை விட கூடுதல் லாப ஈவுத் தொகையை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாகி டத்தோ பா. சகாதேவன் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 7 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது . இந்த ஆண்டு அது அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு , வரும் ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று டத்தோ சகாதேவன் குறிப்பிட்டார்.

நேற்று மாலையில் ஈப்போ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் பேரா மாநில பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சகாதேவன் இதனைத் தெரிவித்தார்.

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் லாபகரமாகச் செயல்பட்டு வருகிறது. அது உறுப்பினர்களின் நன்மைக்கு, அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களைச் சங்கம் தொடரும் என்று டத்தோ சகாதேவன் குறிப்பிட்டார்.

சுமூகமாக நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டில் 845 பேராளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, 18 இடங்களுக்கான பேராளர் தேர்வுக்கு நடைபெற்ற தேர்தலில், 21 பேர் போட்டியிட்டனர் . இதில் தேர்வு செய்யப்பட்ட 18 பேராளர்களின் பெயர்களை டத்தோ சகாதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS