இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை மீண்டும் தொடங்கியது

புத்ராஜெயா, ஏப்ரல்.24-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் இரண்டாம் கட்ட விசாரணை, இன்று வியாழக்கிழமை காலையில் தொடங்கியது.

65 வயதான இஸ்மாயில் சப்ரி, போலீசார் புடை சூழ, காலை 11 மணிக்கு தனது வெள்ளை நிற டொயோட்டா வெல்பஃயர் வாகனத்தில் புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்தை வந்தடைந்தார்.

நாட்டின் ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில் சப்ரி, வழக்கம் போலவே வாகனத்தின் கண்ணாடியை இறக்கி, எஸ்பிஆர்எம் தலைமையகத்தின் முன் குவிந்திருந்த ஊடகவிலாளர்களை நோக்கி கையசைத்தார்.

சொத்து விவரங்கள் தொடர்பில் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக எஸ்பிஆர்எம் ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இதற்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

ஆகக் கடைசியாக இஸ்மாயில் சப்ரி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் 5 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டார்.

இஸ்மாயில் சப்ரியின் நான்கு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு வீடு உட்பட மூன்று இடங்களில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 16 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

WATCH OUR LATEST NEWS