புத்ராஜெயா, ஏப்ரல்.24-
சுமார் 17 கோடி ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, நாளை வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
புத்ரா ஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆஜரான இஸ்மாயில் சப்ரி, மாலை 6.11 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எஸ்பிஆர்எம் தலைமையகத்தை விட்டு வெளியேறும் போது, இஸ்மாயில் சப்ரி, வழக்கம் போலவே வாகனத்தின் கண்ணாடியை இறக்கி, SPRM தலைமையகத்தின் முன் குவிந்திருந்த ஊடகவியலாளர்களை நோக்கி கையசைத்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக இன்று தொடங்கியுள்ள இரண்டாம் கட்ட விசாரணை அவரின் சொத்து விபரங்கள் சம்பந்தப்பட்டதாகும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்து இருந்தார்.