தாப்பா, ஏப்ரல்.25-
பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், நாளை நடைபெறுகிறது. அந்த தொகுதியைத் தற்காத்துக் கொள்வதில் பாரிசான் நேஷனல் பெரும் சவாலை எதிர்நோக்காது என்று சுயேட்சை ஆய்வு மையமான இல்ஹாம் சென்டர் தெரிவித்துள்ளது.
எனினும் பேரா மாநில அரசாங்கம் கொண்டுள்ள இலக்கைப் போலவே பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாகீர் 18 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையைப் பெறுவாரா என்பது கேள்விக்குறியே என்று அந்த ஆய்வு மையம் கூறுகிறது.
ஆயர் கூனிங் இடைத் தேர்தல் குறித்து கடந்த இரண்டு வார காலமாகத் தொகுதி நிலவரத்தை அணுக்கமாக ஆராய்ந்ததில் அத்தொகுதியை பாரிசான் நேஷனல் தற்காத்துக் கொள்வதில் சிக்கல்கள் இருக்காது என்று இல்ஹாம் சென்டர் மையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஹிசோமுடின் பாகார் தெரிவித்தார்.
மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள இந்த இடைத் தேர்தலில் அம்னோ சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக டாக்டர் முகமட் யுஸ்ரி பாகீர் போட்டியிடும் வேளையில் பாஸ் சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அப்துல் முஹைமின் மாலேக்கும், பிஎஸ்எம் கட்சி சார்பில் வழக்கறிஞர் பவானி கே எஸ்ஸும் போட்டியிடுகின்றனர்.