பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.26-
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களின் நிலை குறித்து அக்கறைக் கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது என்று பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி ஓமார் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், சிங்கப்பூரில் உள்ள எங்கள் சமூகமான மலாய்க்கார்களின் நிலை குறித்து ஒரு முஸ்லிம் என்ற முறையில் அக்கறை கொள்ள எங்களுக்கு முழு உரிமையிருக்கிறது என்று முகமட் சுக்ரி ஓமார் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் இறையாண்மை மற்றும் சட்டங்களை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். ஆனால், ஒரு முஸ்லீம் என்ற முறையில் எங்களுக்கு உள்ள தார்மீகப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகி விட முடியாது என்று அந்த மதவாதக் கட்சித் தலைவர் கூறுகிறார்.
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் செயலில் பாஸ் கட்சியின் இரண்டு தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் முகமட் சுக்ரி ஓமார் இதனைத் தெரிவித்தார்.