ஶ்ரீநகர், ஏப்ரல்.27-
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீரில் கிராமங்களில் உள்ள பாதுகாப்புக் குழுக்களுக்கு ராணுவத்தினர் சிறப்பு பயிற்சி அளித்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் உருவாகி உள்ளதுடன் பதற்றமும் எழுந்துள்ளது. இது போன்றதொரு தாக்குதல் நடக்கவே கூடாது என்பதற்காக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரில் கிராமங்களில் உள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு ராணுவத்தினர் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பிட்ட பகுதிகளில் இத்தகைய பயிற்சியைத் தொடங்கி உள்ளதாக ராணுவத்தினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பதற்றமான எல்லை பகுதிகளில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே இது போன்ற சிறப்பு பயிற்சியின் நோக்கம். அதே நேரத்தில் உள்ளூர் பகுதி மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு முயற்சியும் கூட.
ஆயுதங்களை எப்படி கையாள்வது, எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது போன்றவை அவ்வப்போது நடக்கும் அமர்வுகளில் சொல்லிக் கொடுக்கப்படும்.
பாதுகாப்புப் படையினருக்கு உதவிட, சொந்த கிராமங்களைப் பாதுகாக்க உள்ளூர் மக்களுக்கு ராணுவத்தினர் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினர். எல்லைகளில் ஒரு வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க, உள்ளூர் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஒத்துழைப்பு மிக முக்கியமானது.