கோலாலம்பூர், ஏப்ரல்.28-
மலேசியாவும், தெற்காசிய நாடான மாலத்தீவும், புதிய துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு கொள்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளன.
சூரிய சக்தி, தற்காப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய கூட்டு ஒத்துழைப்பு கொள்வது குறித்து இரு நாடுகளும் ஆராய்கின்றன.
பரஸ்பர நன்மை என்ற உணர்வை அடிப்படையாகக் கொண்டு கடல்சார் நாடான மாலத்தீவும், மலேசியாவும் பரந்த அளவிலான துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு கொள்வதற்கு குறிப்பிட்டத்தக்க ஆற்றலை கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவும் மாலத்தீவும் ஏற்கனவே கல்வி, சுற்றுலா மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு கொண்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் மலேசியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.
மலேசியாவுக்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமட் முய்ஸுவை இன்று புத்ராஜெயாவில் வரவேற்று, சந்திப்பு நடத்திய போது, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.