சுங்கை பூலோ வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் பொருள் உதவி

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

சுங்கை பூலோவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் குபு காஜா மற்றும் பூசாட் தாஹ்பிஃஸ் அஸ் ஸாரா லிபானாட், கம்போங் சுங்கை பேலோங் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும், சமயப் பள்ளி மாணவர்களுக்கும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ R. ரமணன் சுமார் ஒரு லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள உதவிப் பொருட்களை வழங்கினார்.

அடிப்படை வசதிக்குரிய மின்னியல் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதமுற்றதால், 150 குடும்பங்களுக்கு சமையல் கட்டுக்குத் தேவையான மின்சாரப் பொருட்களான ரைஸ் குக்கர், மின்சாரக் கேத்தல், மின்சார அடுப்பு உள்ளிட்ட பல வகையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் உடமைகளை இழந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த உதவிப் பொருட்கள், அமானா இக்தியார் மலேசியாவின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். இதே போன்று பூசாட் மாஹாட் தாஹ்பிஃஸ் மையத்திற்குக் குளிர் சாதனப் பெட்டி, பம்ப் செட்டு, அடுப்பு, இரும்பு ரேக், பிளாஸ்டிக் பாய்கள் வழங்கப்பட்டன.

அந்தச் சமயப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் செளகரியமான சூழலில் தங்குவதற்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கி, அவர்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் அமானா இக்தியார் மலேசியாவிற்குத் தலைமையேற்றுள்ள டத்தோ ஷாமீர் அஸிஸ் மற்றும் அவர் தலைமையிலான பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறத் தாம் கடமைப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS