கோலாலம்பூர், ஏப்ரல்.30-
19 வயதுடைய இளைஞர் ஒருவர், கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 39 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.53 மணியளவில் கோலாலம்பூர், சுங்கை பெசி, ஜாலான் ராசாக் மென்ஷென் வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
அந்த அடுக்கு மாடி வீடமைப்புப் பகுதியின் 39 மாடியிலிருந்து கீழே விழுந்த அந்த இளைஞரின் உடல் ஒரு காரின் கூரையின் மீது கிடந்தது.
38 ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் அந்த இளைஞர், 39 மாடிக்கு படிகட்டின் வாயிலாக ஏறிச் செல்வது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசன் தெரிவித்தார்.
39 ஆவது மாடியில் கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு கைப்பேசியைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த இளைஞரின் மூத்த சகோதரியின் வாக்குமூலத்தைத் தாங்கள் பதிவு செய்துள்ளதாக ஏசிபி அய்டில் போல்ஹாசன் குறிப்பிட்டார்.