ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னையில் நடைபெறுகிறது

கோலாலம்பூர், மே.02-

ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, நாளை மே 3 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, திங்கட்கிழமை வரை 3 நாட்களுக்கு சென்னை, கட்டாங்குளத்தூர், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கிறது..

தமிழையும், சிவநெறியையும், சைவ சித்தாந்தத்தையும் உலகெங்கும் பரவச் செய்யும் வகையில் திருகயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழத் தமிழ்ப் பேராயமும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் பங்கு கொள்ளவும், வாழ்த்துரை வழங்கவும் 62 பேர் கொண்ட மலேசியப் பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, இன்று தமிழகத்திற்குப் பயணமானார்.

ஐந்து அமர்வுகளாக 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிசர்லாந்து, மொரிசியஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.

வெளிநாட்டுப் பேராளர்களுக்கு பொறுப்பாளராக டான்ஸ்ரீ நடராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஸ்ரீமத் சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகளின் வரவேற்புரையுடன் மாநாடு தொடங்குகிறது.

தொடக்க விழாவில், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினம் 27- ஆவது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கவிருக்கிறார்.

தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, சைவ சித்தாந்த ஆங்கில நூல் தொகுப்பு பெற்று வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்.

“சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சைவ சித்தாந்தப் பதிவுகள்’ எனும் பொதுத் தலைப்பின் கீழ் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

இம்மாநாட்டுக்கான சிறப்பு மலா், ஆய்வாளா்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை, பத்துக்கு மேற்பட்ட நூல்கள் ஆகியன வெளியிடப்படவுள்ளன.

இம்மாநாட்டில் தேவஸ்தான அறங்காவல் டத்தோ என். சிவகுமார் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணனும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS