நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக முதியவர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், மே.06-

கொட்டகை ஒன்றில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த போது, தனது நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக முதியவர் ஒருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

யீ பாஃட் சியோங் என்ற 70 வயதுடைய அந்த முதியவர், 63 வயதுடைய தனது நண்பரைக் கொலை செய்தற்கானக் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய போதிலும் நீதிமன்றத்தில் நிதானமாகவும், புன்னகைத்தவாறும் இருந்தது, செய்தியாளர்களின் கவன ஈர்ப்பாக அமைந்தது.

அந்த முதியவர் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பிற்பகல் 3.22 மணியளவில் பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் கோலாம், செரோக் தோக் கூன் என்ற இடத்தில் தனது நண்பரை மரக்கட்டையால் அடித்ததுடன், கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS