புதுடெல்லி, மே.06-
இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்குப் பகுதியில் நாளை மே-7 முதல் 8ம் தேதி வரை இரண்டு நாள் போர்ப் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்-22ம் தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருவதில் உறுதியாக உள்ள இந்தியா, அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாளை 7 ம் தேதி நாடு முழுவதும் போர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய விமானப்படை நாளை முதல் இரண்டு நாட்கள் பெரிய அளவிலான போர்ப் பயிற்சி மேற்கொள்ளும்படி, விமானப்படை வீரர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போர்ப் பயிற்சி வழக்கமான தயார்நிலைப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தப் பயிற்சியில், ராஜஸ்தானில் உள்ள அனைத்துலக எல்லையில் இந்திய விமானப்படை, முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும். போருக்கான தயார் நிலையின் ஒரு பகுதியாக, வான்வெளி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.