கோலாலம்பூர், மே.07-
கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவிட் 19 பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி நடந்த பேரணியில் போலீஸ் உத்தரவை மீறியதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மனுவை பிராசிகியூஷன் தரப்பு இன்று மீட்டுக் கொண்டுள்ளது.
தங்களுக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்று கடந்த 2023 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் செய்து கொண்ட மேல்முறையீட்டை, ரத்து செய்வதாக அது தெரிவித்துள்ளதாக ஜசெக.வின் சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவு செயலாளர் நளினா நாயர் தெரிவித்தார்.
கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் மெகுவர்த்தி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டதற்காக 1967 ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் கீழ் நளினா நாயர் மற்றும் சுஜித்ரா ஜெயராஜ் ஆகியோர் கடந்த 2021 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 500 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாதச் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நளினா நாயரும்,சுஜித்ரா ஜெயராஜும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.
எனினும் தாங்கள் விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து மேல்முறையீடு செய்த பிராசிகியூஷன் அவ்வழக்கை தொடரப் போவதில்லை என்று அறிவித்து இருப்பதானது, தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, எவ்வகையிலும் நியாயமில்லை என்றும் அரசியல் நோக்கத்தைக் கொண்டது என்றும் உணரப்பட்டுள்ளது என்று நளினா நாயர் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியார்களிடம் பேசுகையில் நளினா இவ்விவரத்தை விளக்கினார்.