புதுடெல்லி, மே.10-
இந்தியாவிற்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுத்து நிறுத்த உதவி செய்யத் தயார் என்று அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதற்குத் தேவையான வழியை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காஷ்மீர், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் மாறி, மாறித் தாக்கி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி, எல்லையில் அமைதியை உறுதிச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அவசரமாகத் தொலைபேசியில் பேசியுள்ளார்.
போர் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்னைகளைச் சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்குத் தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக மார்கோ ருபியோ கூறினார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமானச் சூழலைத் தவிர்க்கத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ, தம்மிடம் பேசியதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிற்பகலில் உறுதிப்படுத்தியுள்ளார்.