ஷா ஆலம்,மே.10-
தாயைப் போல் குடும்பத்தை வழி நடத்த யாரும் இல்லை உலகினிலேயே என்று அன்னையர் தின விழாவில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச. பிரகாஷ் புகழாரம் சூட்டினார்.
120 அன்னையர்களைக் கெளரவிக்கும் விழாவில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை என்று முன்னோர்கள் சொல்வார்கள். அது போலத்தான் இங்கு கூடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அன்னையினரைத் தெய்வமாக நான் பார்க்கின்றேன்.

நானும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து என் தாயின் சரியான வளர்ப்பினையால்தான் ஒரு வழக்கறிஞராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளேன். ஒரு தாயால் மட்டுமே ஒரு சிறந்த மனிதனை உருவாக்க முடியும். உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். படித்த சமூகமே வாழ்வில் எல்லா வெற்றியையும் பெறும் என்றும் அவர் கூறினார்.

நாம் குறை சொல்லிக் கொண்டு இருக்கும் சமுதாயமாக இருக்கக்கூடாது. குறைகளைச் சரி செய்யும் சமுதாயமாகவும் இருக்க வேண்டும். உங்களைப் பார்த்து யாராவது இது உங்களால் முடியாது என்று கூறினால் நம்பாதீர்கள். எல்லாவற்றையும் மாற்றிப் பார்க்க ஆரம்பியுங்கள். மாற்றங்கள் நமக்குள் உருவானால் நாளைய தலைமுறையினர் இடத்திலும் மாற்றங்கள் உண்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷா ஆலாம், அலாம் மேகா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற அன்னையர் தின விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்குச் சேலைகளை எடுத்து பிரகாஷ் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற அதிர்ஷ்டக் குழுக்கு பரிசுகளையும் அவர் எடுத்து வழங்கினார்.

சிலாங்கூர் மாநில அரசின் நியமனம் பெற்ற இந்திய கிராமத்துத் தலைவரான கோபி அவர்களின் முயற்சியில் இவ்விழா விமரிசையாக நடைபெற்றதுடன் இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய விருந்து உபசரிப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.