சித்திரா பெளர்ணமி திருவிழா: பன்முகத்தன்மையின் கலாச்சார விழா! ங்கா கோர் மிங், வூ கா லியோங் பெருமிதம்

தெலுக் இந்தான், மே.12-

தெலுக் இந்தான், ஜாலான் பண்டாரில் உள்ள நகரத்தாரின் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் சித்திரா பெளர்ணமி திருவிழா, பக்தர்களுடன் இரண்டரறக் கலந்த பன்முகத்தன்மைக் கலாச்சார விழாவாகும் என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் மற்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் வர்ணித்தனர்.

முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல், பக்காத்தான் ஹராப்பான் ஆதரவுடன் இயங்கும் மடானி அரசாங்கம், மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் நமது நாட்டில் மத பன்மைத்துவத்தையும் பன்முகத்தன்மையையும் வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் வர்ணித்தார்.

மடானி அரசாங்கத்தின் கீழ், அனைத்து அரசாங்க உறுப்பினர்களும் குறுகிய மற்றும் தீவிர செயல்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

மேலும் நீண்ட காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நமது தாய் நாட்டை துவம்சமாக்க முயற்சிக்கும் பெரிக்காதான் நேஷனலுக்கு ஒரு போதும் இடம் அளிக்கக்கூடாது என்று ங்கா கோர் மிங்கும் வூ கா லியோங்கும் கேட்டுக் கொண்டனர்.

பேராக் மாநிலத்தை வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கம் அதன் மாநிலக் கொள்கையின் மூலம் பன்முகத்தன்மையை நிலைநிறுத்தி வருகிறது.

பேரா மாநில அரசாங்கம் முஸ்லிம் அல்லாதோர் விவகாரங்களுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்குகிறது. இதில் இந்திய சமூகத்திற்கு 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங்கும் வூ கா லியோங்கும் தெரிவித்தனர்.

இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளின் அளவும் அனைத்து மாநிலங்களிலும் மிக அதிகமாக உள்ளது. இனம், மதம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமை அரசாங்கம் அனைவரையும் அரவணைத்து, உரிய முன்னுரிமையை வழங்கி வருகிறது என்பதற்கு இது சான்றாகும் என்று அவ்விருவரும் குறிப்பிட்டனர்.

இன்று கொண்டாடப்பட்டு வரும் சித்திரா பெளர்ணமி திருவிழாவின் உற்சவத்தில் இரண்டரறக் கலந்து ஒற்றுமையைப் பேணி, மலேசியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று ங்கா கோர் மிங்கும் வூ கா லியோங்கும் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS