அலோர் காஜா, மே.14-
தங்கும் வசதியைக் கொண்ட மலாக்கா, எம்ஆர்எஸ்எம் பள்ளியில் பயிலும் ஒன்றாம் படிவ மாணவியை வெளியில் அழைத்துச் சென்று மானபங்கம் புரிந்தததாகக் கூறப்படும் சார்ஜன் அந்தஸ்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய அந்த இராணுவ அதிகாரி அலோர் காஜா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷூ யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு வரும் மே 20 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியைப் போலீஸ் துறை பெற்றுள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸூல்கைரி முக்தார் தெரிவித்தார்.
கோல சுங்கை பாரு, தாமான் ஆயர் மோலேக் பெர்டானாவில் உள்ள தனது வீட்டிற்கு வார விடுமுறையில் வந்த அந்த 13 வயது மாணவியின் கைப்பேசியைச் சந்தேகத்தின் பேரில் அவரின் தாயார் சோதனையிட்டுள்ளார். அப்போது தனது மகளுக்கும், அண்டை வீட்டுக்காரரான அந்த சார்ஜனுக்கும் இடையில் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் என்று ஸூல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.
அந்த மாணவியின் தந்தையும் இராணுவ வீரர் ஆவார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஸூல்கைரி முக்தார் தெரிவித்தார்.
மலாக்காவில் பல இடங்களுக்கு அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்ற போது, அந்த இராணுவ அதிகாரி, இத்தகைய சில்மிஷத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.