சட்டவிரோதமாகப் பல் கிளினிக்கைத் திறந்ததாகப் பெண் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், மே.15-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டவிரோதமாகப் பல் கிளினிக் ஒன்றைத் திறந்ததாகப் பெண் ஒருவர், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

21 வயது நூர் ஹபிஃஸா ஹாருன் என்ற அந்தப் பெண், நீதிபதி முகமட் காமில் நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட பெண், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இரவு 8.50 மணியளவில் சிரம்பான், தாமான் நூசா இந்தான் என்ற ஒரு வர்த்தகத் தளத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பல் மருத்துவர் அல்லாத பட்சத்தில் அந்த இளம் பெண், சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாத தனியார் பல் மருத்துவக் கிளினிக் ஒன்றைச் சட்டவிரோதமாகத் திறந்ததாக 2018 ஆம் ஆண்டு பல் மருத்துவ சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் அந்தப் பெண் தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார். அவரை இரண்டு நபர்களின் உத்தரவாதத்தின் பேரில் 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி முகமட் காமில் நிஸாம் அனுமதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS