புளோரிடா, மே.17-
அமெரிக்காவில் புளோரிடா விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் புளோரிடா ஜாக்சன்வில்லா அனைத்துலக விமான நிலையமும் ஒன்று. இங்கு பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்தது.
அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ பரவியது. மளமளவென பற்றிய தீயால் அந்த பகுதியே பரபரப்பானது. முதல் தளத்தில் பற்றிய தீ, அப்படியே மேல் மாடிகளுக்குப் பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். தீ விபத்தை அடுத்து உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விபத்தின் போது யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தீ விபத்தின் எதிரொலியாக 30க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்களின் புறப்படும் மற்றும் வருகை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.