புதுடெல்லி, மே.17-
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ட்ரோன்களை அனுப்பித் தாக்க முயன்றது. ஆனால், இந்திய ராணுவத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது தெரியவந்துள்ளது. ட்ரோன்கள் ஊடுருவத் துவங்கியதுமே, இந்திய பாதுகாப்புப் படையினர், வான் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியதுடன், எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் அனைத்துலக எல்லைப் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தானின் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன.
இத்துடன் பாதுகாப்புக்குக் கூடுதல் சேர்க்கும் வகையில், குறுகிய தூரத்தில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. இத்துடன், ஆகாஷ் டிர் அமைப்பும் பாதுகாப்புப் பணியில் இருந்தது. இத்துடன் சுவீடனில் தயாரிக்கப்பட்ட எல் 20 வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜூயு -23 எம்எம் துப்பாக்கிகள், ஷில்கா துப்பாக்கி அமைப்பும் பாகிஸ்தான் டுரோன்களை வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.