பேராவில் போலீஸ் தினக் கொண்டாட்டமும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும்

ஈப்போ, மே.17-

அரச மலேசிய போலீஸ் படையின் 218 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு பேரா மாநிலத்தில் இந்திய காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து சிறப்பு வழிபாடும் அதன் கொண்டாட்டமும் வெகு சிறப்புடன் நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போலீஸ் தினக் கொண்டாட்டம் இந்த ஆண்டு சூப்ரிடெண்டன் எம். ரவி தலைமையில் ஈப்போ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேரா மாநில போலீஸ் துறையில் நடப்பில் உள்ள அதிகாரிகளுடன் பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சுமார் 200 பேர் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. முக்கியப் பொறுப்பாளர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, நாதஸ்வர, மேளதாள இசை முழக்கத்துடன் ஆலய பிரகாரத்தை வலம் வந்தனர்.

போலீஸ் தினத்தையொட்டிய சிறப்பு வழிபாட்டுக்குரிய நிகழ்வாக இருந்த போதிலும், போலீஸ் துறையினர் தங்களின் சமூக கடப்பாட்டை வெளிப்படுத்த 2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்ற இந்திய காவல்துறை உறுப்பினர்களின் 9 பிள்ளைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டதாக நிகழ்விற்கு தலைமையேற்ற சூப்ரிடெண்டன் ரவி தெரிவித்தார்.

அண்மையில் தெலுக் இந்தான் சாலை விபத்தில் மரணமுற்ற கலகத் தடுப்புப் போலீஸ் பிரிவைச் சேர்ந்த 9 காவல் துறை வீரர்களுக்காகச் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றதாக சூப்ரிடெண்டன் ரவி குறிப்பிட்டார்.

போலீஸ் துறையில் பணியாற்றி வரும் தங்களுக்கு சமூகப் பணிகளிலும் ஈடுபட ஆதரவை வழங்கி வரும் அனைவருக்கும் சூப்ரிடெண்டன் ரவி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரா மாநில போலீஸ் துறையில் பணியாற்றியப் பின்னர், ஒரு மாதத்திற்கு முன்பு பினாங்கிற்கு பணியிட மாற்றலாகிச் சென்ற போதிலும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தது மூலம் பழைய நண்பர்களைப் பார்த்து மகிழும் சூழல் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி நளினி நாகையா குறிப்பிட்டார்.

இன்ஸ்பெக்டர் ரினோஷா செல்வதுரை கூறுகையில், போலீஸ் தினத்தையொட்டி இது போன்ற நிகழ்வு, பேரா மாநிலத்தில் மட்டுமல்ல, மலேசியா முழுவதும் உள்ள மாநிலக் காவல் துறையைச் சேர்ந்த இந்திய அதிகாரிகள், முன்னெடுத்து நடத்துகின்ற வருடாந்திர நிகழ்வாகும் என்றார்.

பேரா மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் இந்திய போலீ்ஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள், ஈப்போ இந்து தேவஸ்தானப் பரிபாலன சபா தலைவர் ஆர். சீத்தாராமன் உட்பட பலரும் கலத்து சிறப்பித்தனர்.

WATCH OUR LATEST NEWS