கோலாலம்பூர், மே.18-
கோலாலம்பூரில் உள்ள பிபிஆர் வீடுகளிலும் பெருமாஹான் ஆவாம் குடியிருப்புகளில் உள்ள வாடகைதாரர்கள் 70 மில்லியன் ரிங்கிட் வரை வாடகை நிலுவையில் வைத்துள்ளதால், பராமரிப்பு, நிர்வாகப் பணிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமும் மலேசிய காவல் துறையும் டேசா ரெஜாங் பிபிஆர் குடியிருப்பில் உள்ள மக்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த அவசரப் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதுவரை வாடகை நிலுவைத் தொகை 70 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்றும், இப்பிரச்சினையைத் தீர்க்க வாடகை வசூல் பணிக்குழு (TFCS) போன்ற பல நடவடிக்கைகளை டிபிகேஎல் எடுத்துள்ளதாகவும் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ மைமூனா முகமட் ஷாரிஃப் தெரிவித்தார்.
வசூலிக்கப்படும் வாடகை வருவாய் சிறந்த சேவைகளாக மக்களுக்குத் திருப்பி வழங்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாடகைச் செலுத்தாதவர்களுக்கு நீர் இணைப்பு துண்டிப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என்று டிபிகேஎல் எச்சரித்துள்ளது.