இஸ்லாமாபாத், மே.21-
பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்தைக் குறிவைத்து நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் குழந்தைகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் பலத்த காயமடைந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் ராணுவப் பள்ளிக்கூடம் உள்ளது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்குக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் பேருந்து வெடித்துச் சிதறியது.
இவ்விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.