பேராக், பகான் செராய், களும்பாங் தோட்ட ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண வைபோகம்

பாகான் செராய், மே.23-

நாட்டில் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான 150 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட பேராக், பகான் செராய், களும்பாங் தோட்டத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் நாளை மே 24 ஆம் தேதி சனிக்கிழமை திருக்கல்யாண வைபோக நிகழ்வு வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

149 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி கடந்த மே 14 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண வைபோக நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

வரும் மே 31 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுவிருக்கும் தீமிதி திருவிழாவிற்கு முன்னதாக நடைபெறவிருக்கும் திருகல்யாண வைபோக நிகழ்வில் மேளதாள முழக்கத்துடன் மாங்கல்யம், சீர்வரிசை சுமந்து ஊர்வலமாக வந்து, சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு திருகல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் சுற்று வட்டார பொது மக்களுடன் அரிமா மறுமலர்ச்சி இயக்கத் தலைவரும், தமிழ் மலர் நாளிதழின் இயக்குநருமான செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜனும் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.

மெய்யன்பர்கள், சுற்று வட்டார மக்கள், அனைவரும் திரளாக கலந்து கொண்டு அம்பாளின் அருளாசியைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS