கணக்கு விவரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பது தார்மீகக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும்

சிரம்பான், மே.24-

பொது மக்கள் வழங்கக்கூடிய காணிக்கை மற்றும் நன்கொடைகளால் ஆலயங்கள் வழிநடத்தப்படுவதால் ஆலயங்களின் கணக்கு, வழக்கு விபரங்கள், பொதுமக்களுக்கு அறிவிப்பதை, ஆலய நிர்வாகங்கள் தார்மீகக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினரும், நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவைத் தலைவருமான சிவஸ்ரீ டாக்டர் A.L. ஆனந்தகோபி சிவாச்சாரியார் வலியுறுத்தியுள்ளார்.

ஆலய நிர்வாக உறுப்பினர்கள் அல்லது அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவில் கணக்கு வழக்குகளைக் காட்டுவதற்கு ஆலய நிர்வாகங்கள் கடமைப்பட்டுள்ளதாகக் கருதலாம். ஆனால், ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு அப்பாற்பட்டு, பொது மக்கள் வழங்கக்கூடிய காணிக்கை மற்றும் நன்கொடைகளால் ஆலய நிர்வாகங்கள் வழிநடத்தப்படுகின்றன என்பதை ஆலய நிர்வாகங்கள் மறந்து விடக்கூடாது என்று ஆனந்தகோபி சிவாச்சாரியார் நினைவுறுத்தினார்.

கோவில் நிர்வாகங்கள் என்பது நிறுவனங்கள் அல்ல. பங்குதாரர்களுக்கு மட்டுமே கணக்கு வழக்கு விவரங்களைக் காட்ட முடியும் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு. ஆனால், அவ்வாறு கணக்கு விபரங்களை பொது மக்களுக்கு அறிவிப்பது என்பது ஓர் ஆலய நிர்வாகத்தினர் தாங்கள் ஏற்றுள்ள பொறுப்புக்கு ஏற்ப, கொண்டுள்ள ஒரு வேள்வியாகும்.

இவ்வாறு செயல்படுகின்ற திருக்கோவில் நிர்வாகங்களே வெளிப்படைமிக்க, திறன்மிக்க ஒரு முன்னுதாரணக் கோவில் நிர்வாகமாகும். அதற்கு சிரம்பான் தாமான் துவாங்கு ஜாபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானம், ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என்று ஆனந்தகோபி சிவாச்சாரியார் விளக்கினார்.

ஆலயத் தலைவர்கள் என்பவர்கள் தாங்களே பெரியவர்கள் என்ற நினைப்பை மறந்து, தாமும் ஒரு தொண்டரே என்று கருதும் நிலை ஏற்பட்டால் மட்டுமே ஓர் ஆலயம், பொது மக்களுடன் இரண்டறக் கலந்து உயர்வடைய முடியும் என்று நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்களின் அர்ச்சகர் சங்கத்தின் தலைவருமான ஆனந்தகோபி சிவாச்சாரியார் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS