பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கல்விப் பணி போற்றத்தக்கதாகும்

பிறை, மே.26-

பினாங்கு, பிறை, ஜாலான் பாருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கல்விப் பணி போற்றத்தக்கதாகும் என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு புகழாரம் சூட்டினார்.

ஆலயங்கள் என்பது சமயத்தின் மேன்மைக்கும், அதனை வளர்ப்பதிலும் பிரதான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதே வேளையில் தாம் சார்ந்துள்ள சமூகத்தின் மேன்மைக்கு, குறிப்பாக, பிள்ளைகளுக்குக் கல்விப் பணிகளையும் ஆற்றி வருவது மிகச் சிறந்தத் தொண்டுப் பணியாகும்.

அந்த வகையில் பிறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கல்விப் பணி, சிகரம் வைத்தது போல் அதன் நிர்வாகத்தை உச்சத்தில் பார்க்கும் அளவிற்கு மேன்மையாக அமைந்துள்ளது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு புகழாரம் சூட்டினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய இந்து சமய ஆசிரியர்களுக்கான 9 ஆம் ஆண்டின் பயிலரங்கு விழா மற்றும், பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு 12 ஆவது ஆண்டாக மீள்பார்வை பயிற்சி நூல்கள் ஒப்படைக்கும் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு, மற்றும் தற்போது அறிமுகப்படுத்துப்பட்டுள்ள UASA ( யுவாசா) முதலிய தேர்வுகளுக்கு 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக மீள் பார்வை பயிற்சி நூல்களை வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சராசரி 60 ஆயிரம் ரிங்கிட்டை ஆலயம் செலவிட்டு வருகிறது.

இதே போன்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் மூலமாக இந்து சமய ஆசிரியர்களைத் தயார்படுத்தும் சமயக் கல்வி பயிலரங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் நடத்தி வருகிறது. இதற்கு ஆண்டு தோறும் சராசரி 90 ஆயிரம் ரிங்கிட்டைச் செலவிட்டு வருகிறது.

சமயத்தையும், கல்வியையும் இரு கண்களாகப் போற்றி வரும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் புனிதப்பணி, பினாங்கு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

இவ்விரு பணிகளையும் ஆண்டு தோறும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் செவ்வனே நடத்தி வருவது குறித்து ஆலயத் தலைவர் மேஜர் M. சேகரன் இவ்வாறு விவரித்தார்.

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் சேவைக்கு பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது குறித்து ஆலயம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வத் மேஜர் சேகரன் குறிப்பிட்டார்.

இந்த நிழ்ழ்வில் மைக்கியின் தலைவரும், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் அறங்காவல் தலைவருமான டத்தோஸ்ரீ N. கோபாலகிருஷ்ணன், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மலேசிய இந்து சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

WATCH OUR LATEST NEWS