கோலாலம்பூர், மே.26
கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள 46 ஆவது ஆசியான் மாநாட்டில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், “ஆசியான் 2045: நாம் பகிர்ந்து கொள்ளும் எதிர்காலம்” என்ற தலைப்பிலான பிராந்தியத்தின் நீண்ட கால தொலைநோக்கு ஆவணப் பிரகடனத்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆசியான் கூட்டமைப்பின் தொடர்ச்சியான பிராந்திய ஒருங்கிணைப்புப் பயணத்தில், கோலாலம்பூர் பிரகடனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைந்துள்ளது.
இது எதிர்காலத்தில் வாழக்கூடிய தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட பிரகடன உடன்படிக்கையாகும் என்று ஆசியான் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் வர்ணித்தார்.
இந்தப் பிரகடனம், “யதார்த்தத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது, உறுதியால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது, மற்றும் நம்பிக்கையால் சாத்தியமாக்கப்பட்டுள்ளது” என்று டத்தோஸ்ரீ அன்வார் புகழாரம் சூட்டினார்.
பல தசாப்தங்களாக ஆசியானின் முயற்சிகள், வியூகங்கள், தொலைநோக்குப் பார்வை, பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பிராந்திய நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டுள்ளன.
புதிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஆவணம், அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில் அந்த மரபின் தொடர்ச்சியாகச் செயல்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
“செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் பச்சை மற்றும் நீல பொருளாதாரங்களில் வழிநடத்தும் ஆசியான் திறன் நமது செழிப்பை மட்டுமல்ல, நமது ஒற்றுமையையும் தீர்மானிக்கும்” என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
ஆசியான் அமைப்பின் இந்த ஆண்டுத் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் மலேசியா ஏற்பாடு செய்துள்ள இரண்டு உச்சநிலை மாநாடுகளில் இது முதல் அங்கமாகும். ‘அனைவரையும் உள்ளடக்குவதும், நீடித்த நிலைத்தன்மையும்’ எனும் கருப்பொருளில் மலேசியா இவ்வாண்டு ஆசியான் அமைப்பின் நடவடிக்கைகளை வழிநடத்துகிறது.
தென்கிழக்காசிய வட்டாரத்தின் தொலைநோக்குப் பார்வையையும் புவிசார், பொருளியல் சவால்களுக்கிடையில் ஒன்றுபட்ட, மீள்திறன்மிக்க வட்டார அமைப்பாக ஆசியான் உருவெடுப்பதையும், இந்தக் கருப்பொருள் கோட்டிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.