கோலாலம்பூர், மே.27-
நாட்டின் முன்னணி தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்திற்கு மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று நல்லெண்ண வருகையை மேற்கொண்டார்.
தொழிற்சங்கங்களுக்கும், மனித வள அமைச்சுக்கும் இடையில் பரஸ்பர உறவையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் அலுவலகத்திற்கும் அமைச்சர் ஸ்டீவன் சிம் நல்லெண்ண வருகை மேற்கொண்டு வருகிறார்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு என்யுபிடபள்யு எனப்படும் தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் ஸ்டீவன் சிம்மை, சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன், சங்கத்தின் தேசியத் தலைவர் தனபாலன் மாணிக்கம் மற்றும் நிர்வாக மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.
தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்க வரலாற்றில் உறுப்பினர்களின் நலன் சார்ந்த விவகாரங்களைக் கண்டறிவதற்கு அமைச்சர் ஒருவர், தொழிற்சங்கத்திற்கு நேரடி வருகை புரிந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்று டத்தோ ஜி. சங்கரன் குறிப்பிட்டார்.
முன்னதாக, மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிற்கு டத்தோ ஜி. சங்கரன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
இதனிடையே தொழிலாளர் ஆலோசனை மன்றத்தில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தாமசேகரன் நியமிக்கப்படுவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.