கோலாலம்பூர், மே.28-
பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் நூருல் இஸாவிடம் தோல்விக் கண்ட ரஃபிஸி ரம்லி, பொருளாதார அமைச்சர் பதவிலிருந்து விலகியதைப் பின்பற்றி, இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் தனது அமைச்சர் பதவியைத் துறந்துள்ளார்.
செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான நிக் நஸ்மி, உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
மலேசிய வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியிருப்பது இதுவே முதல் முறையாகும். தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செத்தியாவங்சா பிகேஆர் டிவிஷன் தேர்தலில் தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்விக் கண்டவரான நிக் நஸ்மி, உதவித் தலைவர் பதவியும் கைநழுவிப் போனதால், தாம் அமைச்சர் பதவியில் தொடர்ந்து அலங்கரிப்பது முறை அல்ல என்று அறிவித்துள்ளார்.
இவரது பதவித் துறப்புக் காலம் ஜுலை 4 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. பதவி விலகலுக்கானக் கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்கி விட்டதாகவும் நாளை முதல் விடுப்பில் செல்வதாகவும் நிக் நஸ்மி அறிவித்துள்ளார்.