ஶ்ரீநகர், மே.29-
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இதற்கு முன் இல்லாத அளவுக்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் பஸ்குச்சான் என்ற பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் இருவரும் சிக்கினர். அவர்களுடன் வேறு யாரும் அதே பகுதியில் பதுங்கி இருக்கின்றனரா என்றும் ஆராயப்படுகிறது. இம்மாதம் 19ம் தேதி இதே போன்ற தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் இருவர் பிடிபட்டனர். 2 கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள், 43 தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான வெடிப் பொருட்கள், ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.