கோலாலம்பூர், மே.30-
தனது பெயரைப் பயன்படுத்தி சில தவறான தகவல்களை வெளியிட்டு வரும் தரப்பினரை பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்க் துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் சாடியுள்ளார்.
எந்தவோர் அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகளும் தனது அலுவலகம் மூலமாகவோ அல்லது தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலமாகவோ மட்டுமே வெளியிடப்படும் என்றார் டத்தோஸ்ரீ ரமணன்.
அரசியல் ஆதாயத்திற்காக விரக்தியடைந்த பொறுப்பற்றத் தரப்பினர், தம்மைப் பற்றி சில தவறானத் தகவல்களை வழங்கி வருவதாகவும், இது போன்ற விவகாரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டின் போது, கட்சி உறுப்பினர்களிடையே வலிமையை ஏற்படுத்துவதற்கு ஒருவருக்கொருவர் அவதூறு வேண்டாம் என்பதைத் தாம் எச்சரித்து இருந்ததையும் டத்தோஸ்ரீ ரமணன் நினைவுகூர்ந்தார்.