பெட்டாலிங் ஜெயா, மே.30-
தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நீண்ட கால நிர்வாகப் பணியாளரும், தொழிற்சங்கவாதியும், கூட்டுச் சம்பள ஒப்பந்தம் மீதான பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றவரான வி. தாமாசேகரன், தேசியத் தொழிலாளர் ஆலோசனை மன்றத்தில் ஒரு நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு வருகைப் புரிந்த மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் முன்னிலையில் இதனை அறிவித்தார்.
தொழிற்சங்க ஈடுபாடும், அது தொடர்பான கூட்டுச் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த அனுபவம் கொண்டவரான தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநில நிர்வாகச் செயலாளருமான தாமாசேகரனின் அனுபவம், தன்னைப் பிரமிக்க வைப்பதாக உள்ளது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு மே முதல் தேதியிலிருந்து வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தாமாசேகரனின் பதவிக் காலம் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
1980 ஆம் ஆண்டிலிருந்து தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள தாமாசேகரன், மனித வள அமைச்சின் கீழ் உள்ள தேசியத் தொழிலாளர் ஆலோசனை மன்றத்தில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டது மூலம், தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்களை முன்னெடுப்பதிலும், அவை தொடர்பான உள்ளீட்டுக் கருத்துகளைத் தெரிவிப்பதிலும் தாமாசேகரன் முக்கியப் பங்காற்ற முடியும் என்று தாம் நம்புவதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் நம்பிக்கை தெரிவித்தார்.