கோலாலம்பூர், மே.30-
டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நாட்டின் பிரதமராக இருந்த போது நடந்த மிகப் பெரிய ஊழலான 1எம்டிபி நிதி மோசடியில் முக்கியச் சூத்திரதாரியான கோல்டுமேன் சாச்சஸ் முன்னாள் வங்கி அதிகாரி திம் லேஸ்னருக்கு அமெரிக்கா, நியூ யார்க் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தம்முடையச் செயலுக்காக மிகவும் வருத்தம் கொள்வதாகவும், இதற்காக மலேசிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் லேஸ்னர் தெரிவித்தார்.
தனது கருணை மனுவில், லேஸ்னர் இவ்வாறு தெரிவித்த போது, அவருக்கு நீதிபதி மார்கோ புரோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
வங்கியின் முக்கிய அதிகாரி என்ற முறையில் மிகத் துணிச்சலாக பெரிய ஊழலுக்கு காரணமாக இருந்தது குறித்து லேஸ்னரை நீதிபதி மார்கோ புரோடி கண்டித்தார்.
போலீசாரால் இன்னமும் தேடப்பட்டு வரும் மலேசியத் தொழில் அதிபர் ஜோ லோவின் உதவியுடன் 1எம்டிபிக்காக 650 கோடி அமெரிக்க டாலர் அல்லது கிட்டத்தட்ட 2,600 கோடி மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதில் லேஸ்னர் தலைமையிலான கோல்ட்மேன் சாச்சஸ் வங்கி முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.