கோம்பாக், மே.31-
பாலர் பள்ளி ஒன்றில், பேனாவைப் பயன்படுத்தி, ஆறு வயது சிறுமி ஒருவரைச் சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படு 30 வயது ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவாங், கோத்தா எமரல் பகுதியில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அந்த ஆசிரியையை போலீசார் கைது செய்து, 6 நாள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் நாசிர் தெரிவித்தார்.
தனது மகளின் தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான தந்தை ஒருவர், இது குறித்து போலீசில் புகார் செய்ததாகக் குறிப்பிட்டார்.
ஊசி குத்துவதைப் போல் பேனாவைப் பயன்படுத்தி, அந்த சிறுமியின் தலையில் குத்தி, அந்த ஆசிரியை காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பாலர் பள்ளியின் ரகசிய கேமராவின் பதிவு நாடாவைப் போலீசார் கைப்பற்றியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.