பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.01-

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சய் குமார் ஜா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவினர், இன்று ஜுன் முதல் தேதி கோலாலம்பூருக்கு வருகை புரிந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள அண்மைய நிலவரங்கள் குறித்து விளக்குவதும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் பொதுவான போராட்டத்தில் மலேசியாவின் ஆதரவைப் பெறுவதும், பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதும் இந்தக் குழுவினரின் நோக்கமாகும்.

இக்குழுவினரின் வருகையையொட்டி மலேசியாவின் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், மெனாரா செண்ரல் விஸ்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் தன்மை குறித்தும் வருகை தந்துள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவினர் விளக்கம் அளித்தனர்.

WATCH OUR LATEST NEWS