இந்தியாவின் போதைப் பொருள் கடத்தல் மன்னன், எவ்வாறு மலேசியாவில் தங்கியிருந்தான் ? யார் யாருடன் தொடர்பு ? விசாரணையைத் தொடங்கியது புக்கிட் அமான்

கோலாலம்பூர், ஜூன்.01

இந்திய போலீசாரால் தேடப்பட்டு வந்த அந்த நாட்டின் போதைப் பொருள் கடத்தல் மன்னன், மலேசியாவில் பதுங்கியிருந்தது, கடந்த மே 13 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

35 வயது மதிக்கத்தக்க அந்த இந்தியப் பிரஜை கடந்த மே 27 ஆம் தேதி இந்தியப் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

இருப்பினும், அவன் மலேசியாவில் பதுங்கியிருந்த காலக் கட்டத்தில் அவன் எங்கெங்கு தங்கியிருந்தான், யார் , யாருடன் தொடர்பு கொண்டுள்ளான், அவனுடன் யார், யார் சந்திப்பு நடத்தியுள்ளார்கள் முதலிய விவரங்களை போலீசார், தோண்டத் தொடங்கியுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

மலேசியாவில் அவன் தங்கியிருந்த காலக் கட்டத்தில் தனது தொடர்பு வலையை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் அவனின் நடமாட்டம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னனை மலேசியாவில் உள்ள தனிநபர்கள் சந்தித்து இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை டான் ஶ்ரீ ரஸாருடின் மறுக்கவில்லை.

தற்போது உளவுத் துறையின் உதவியுடன் இவ்விவகாரம் ஆராயப்பட்டு வருவதாக ஐஜிபி மேலும் கூறினார். அந்த நபர், மலேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த வேளையில் அதிகாலை 1.35 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு அவனை வளைத்துப் பிடித்ததாக ஐஜிபி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS