அது திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட விபத்து

கோலாலம்பூர், ஜூன்.02-

கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் சமிக்கை விளக்குப் பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒரு காரை மோதி, அதன் ஓட்டுநரான மாது ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்திய சம்பவமானது, அக்காரை மோதிய டொயோட்டா கால்டீனா வாகனமோட்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

டொயோட்டா கால்டீனா ரகக் காரைச் செலுத்திய 57 வயது நபருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காரின் ஸ்டேரிங்கை பிடிக்க இயலாமல் அவரின் கைகள் நழுவின. இந்நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து, அடுத்தச் சாலைக்கு நுழைந்தது என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் முகமட் ஸாம்ஸூரி முகமட் இசா தெரிவித்தார்.

ஜாலான் அம்பாங்கில் உள்ள கிளேனிகல்ஸ் மருத்துவமனையின் முன் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஜேக்கோ 7 ரக வாகனத்தைச் செலுத்திய 49 வயது மாது, காயங்களுக்கு ஆளானார். அவரின் வாகனம் சேதமுற்றதுடன், அவரின் கார் நிலைத்தன்மையை இழந்து பின்னோக்கிச் சென்றதில் இரு கார்களும் சேதமுற்றதாக ஸாம்ஸூரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS